Monday, March 2, 2009

லக்ஷ்மி பூஜை

லக்ஷ்மி பூஜை செய்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும். வெள்ளிகிழமைகளில் நேரம் இருப்பவர்கள் இப்பூஜையை செய்து பலன் அடையலாம். இதற்கு வேண்டிய பொருட்கள்:
குத்து விளக்கு - ஒன்று
உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் - ஒரு சிறு பாத்திரத்தில்
பால் - ஒரு கிண்ணம்(சுத்தமான வெள்ளி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் - வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் - ஒரு கிண்ணம்
குங்குமம் - இடுவதற்கு
சந்தனம்/மஞ்சள் - இடுவதற்கு
பெரிய தாம்பாளம் - ஒன்று
லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு - அவரவர்கள் வசதிக்கேற்ப வெண்கலத்திலும் சிறிய மகா லக்ஷ்மி விக்ரகாங்கள் கிடைக்கின்றன
சர்க்கரை பொங்கல் - நெய்வேத்யம் செய்ய
முளை கட்டிய கருப்பு கொண்டாய் கடலை - (பூஜைக்கு முன் நாள் காலையிலே கடலைகளை ஊற வைத்து விடுங்கள்)
பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.
குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம். லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே
மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டாய் கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள்.
முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.

பூஜை அறை

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருப்பது அவ்வீட்டின் செழிப்பையும் தெய்வீகத்தையும் நிலைநிறுத்தும். எவ்வளவுதான் வீட்டை அலங்காரம் செய்தாலும், பூஜை அறை என்று ஒன்று இல்லை என்றால் வீட்டில் மங்களம் குறையும். நிறைய வீடுகளில் நான் பார்த்திருக்கிறேன். ஹால், பெட்ரூம், போன்ற அறைகளை அலங்காரம் செய்துவிட்டு பூஜை அறையை மறந்துவிடுகிறார்கள். பூஜை அறைக்கு ஏக போக அலங்காரங்கள் தேவை இல்லை. ஆனால், கடவுளின் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும், ஒரு மண் விளக்காவது ஏற்றி வைக்க வேண்டும். தினமும், இரண்டு நிமிடம் மனம் ஒன்றி த்யானம் செய்தால் போதும் . தினமும், கடவுளுக்கு எதாவது படைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. விளக்கை மற்றும் ஏற்றி, த்யானம் செய்து, வெள்ளிகிழமைகளில் பழமோ, பாலோ அல்லது நய்வேத்யமோ செய்தாலே போதுமானது. தினமும், நமக்கு கிடைக்கும் உணவுக்கு கடவுளுக்கு நன்றி செலுத்தினால், போதும். தடபுடலாக பூஜை, வெள்ளியிலே கவசம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கடவுள் எதிர்பார்ப்பதில்லை. உண்மையான பக்தியும், தூய்மையான உள்ளமும் மட்டுமே கடவுள் எதிர்பார்க்கும் முதல் படி.....

நாம் உச்சரிக்கும் மந்திரங்களுக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொண்டு உச்சரித்தால் மேலும் சிறப்பு. மந்திரங்கள் தெரியாவிட்டால் வெறும் "ஓம்" என்ற உச்சரிப்பை நாம் கடைபிடித்து நாம் மனமுருக வேண்டினால் இறைவன் அருள் நிச்சயம் உண்டு. நாம் வழிபடும் தெய்வங்கள் நிறைய. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் மீது நம்பிக்கை இருக்கும். நாம் வழிபடும் சக்திக்கு ஒரு உருவம் வேண்டியுள்ளதால் நாம் இறைவனை பல உருவங்களில் வழிபடுகிறோம். எல்லா தெய்வங்களும் ஒன்றே. அனைத்தும் ஒரு ஒளியில் தான் அடங்கியுள்ளது. நம்பிக்கையின் உருவமாக ஒவ்வொரு தெய்வத்தை வணங்குகிறோம். மொத்தத்தில் எல்லாமும் ஒரு ஒளியை நோக்கித்தான் செல்கிறது.